Published : 23 May 2020 03:46 PM
Last Updated : 23 May 2020 03:46 PM

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி: விடுபட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி உத்தரவிடுக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளில், விடுபட்டுள்ள கடலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (மே 23) தலைமைச் செயலாளர் சண்முகத்திற்கு எழுதிய கடிதம்:

"தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு 67.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கையையும், இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்கான அதிகரிகளின் பட்டியலையும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

ஆனால், டெல்டா பாசனப் பகுதியில் முக்கியமான மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டம் பட்டியலில் இடம் பெறவில்லை. இம்மாவட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை. பணிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படவில்லை. தமிழக அரசு இந்த பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட்டு உடனடியாக கடலூர் மாவட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இம்மாவட்டங்களில் நடைபெறும் இந்த தூர்வாரும் பணியில் ஊழல் முறைகேடுகளுக்கு இடம் தராமல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு அக்கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x