பேராவூரணி அருகே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை நடத்தும் ஆசிரியர்

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை நடத்தும் ஆசிரியர் தமிழரசன்
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை நடத்தும் ஆசிரியர் தமிழரசன்
Updated on
1 min read

பேராவூரணி அருகே அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த ஏனாதி கரம்பை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் தமிழரசன் (52). இவர் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தைச் சேர்ந்தவர். அங்கிருந்து தினமும் இரு சக்கர வாகனத்தில் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு வந்து சென்றார்.

கரோனா ஊரடங்கு உத்தரவால், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், வருகிற ஜூன் மாதம் 15-ம்தேதி முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழரசன் தினமும் 25 கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் வந்து பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ள 25 மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களது பெற்றோர்களுடன் கலந்து பேசி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி விட்டு, அவர்களுக்கு பாடங்களில் ஏற்பட்டு சந்தேகங்களை நேரிலேயே தீர்த்தும், வீட்டிலேயே பாடங்களையும் நடத்தி வருகிறார். இதனால் மாணவர்களும் மகிழ்ச்சியுடன் தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.

இதை தவிர ஏனாதி கரம்பை மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கும் பணியிலும் தமிழரசன் ஈடுபட்டுள்ளார். அரசு பள்ளி ஆசிரியரின் இந்த தன்னலமற்ற சேவையினை அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர் தமிழரசன் கூறும்போது, "எனது வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடையை செயல்பாடுகளை பெற்றோர்களுடன் பேசி, மாணவர்கள் படிப்பதற்கு ஊக்கம் அளிப்பது வழக்கம்.

அதன்படி, பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு பாடங்களில் ஏற்பட்ட சந்தேங்களை தீர்த்து வைத்து விட்டு, அவர்களுக்கு தேர்வுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுத்து விட்டு வந்தேன். இது போன்று கடந்த 10 ஆண்டாக செய்து வருகிறேன். இதனால் ஆசிரியரான எனக்கும், மாணவர்களுக்கும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in