Published : 23 May 2020 12:51 PM
Last Updated : 23 May 2020 12:51 PM

ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்

ஈரான் நாட்டில் இருந்து தாயகம் திரும்ப காத்திருக்கின்ற தமிழக மீனவர்களை அழைத்து வர மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 23) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரான் நாட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்க கூலிகளாக சென்ற சுமார் 750 மீனவர்கள் கரோனா பாதிப்பால் நாடு திரும்ப முடியாமல் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் குடும்பங்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

அதாவது, கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஈரான் நாட்டிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தமிழக மீனவர்கள் வேலையின்றி, பொருளாதாரம் ஈட்ட முடியாமல், அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல் சிரமப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், கரோனா வைரஸ் நோய் பரவல் காரணமாக மீனவர்களும் அச்சத்தில் இருக்கின்றனர்.

தமிழக மீனவர்கள் உள்ளிட்ட ஈரானில் இருந்து தாயகம் திரும்ப காத்திருக்கின்ற இந்தியர்கள் அனைவரையும் கப்பல் மூலம் அழைத்து வர மத்திய அரசு ஏற்கெனவே நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஈரானில் இருக்கின்ற தமிழக மீனவர்களுக்கு போதிய பொருளாதாரம் இல்லாமல் நாளுக்கு நாள் சிரமங்கள் அதிகரித்துக்கொண்டே போவதால் வேதனையில் இருக்கிறார்கள். இவர்கள் தாயகம் திரும்ப மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க அவர்களின் குடும்பங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எனவே, ஈரானில் தவிக்கின்ற தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர மத்திய அரசு விரைவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x