Last Updated : 23 May, 2020 11:58 AM

 

Published : 23 May 2020 11:58 AM
Last Updated : 23 May 2020 11:58 AM

கரோனா தொற்றிலிருந்து காத்தவர்களை அழைத்து கவுரவித்த கிராமம்!

கரோனா தொற்றுப் பரவலால் தடை செய்யப்பட்ட பகுதியாக 21 நாட்கள் இருந்து தற்போது மீண்டுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, பிரியாணி விருந்து வைத்து நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துகுப்பை ஊராட்சியில் கடந்த மாதம் ஆண் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதனால் அந்தப் பகுதியை வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபர் குணமடைந்து சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார். இதையடுத்து 21 நாட்களுக்கு பிறகு, சீல் வைக்கப்பட்ட தடுப்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதனால் உளுத்துகுப்பை கரோனா தொற்று இல்லாத கிராமமாக மாறியது. இதையடுத்து கடந்த 21 நாட்களாக கிராமத்தில் முகாமிட்டுத் தங்கி தங்களுக்கு சுகாதாரப் பணிகளை மேற்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அக்கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று அந்த களப்பணியாளர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் தங்கள் கிராமத்துக்கு வரவழைத்தனர். வரிசையாக நின்ற கிராம மக்கள் அனைவரும், அவர்களுக்கு மலர்களைத் தூவி, கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கிராம மக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப் பட்டனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், வருவாய்த் துறையினர் என அனைவரும் தனிமனித இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x