Last Updated : 23 May, 2020 11:50 AM

 

Published : 23 May 2020 11:50 AM
Last Updated : 23 May 2020 11:50 AM

போலி இ.பாஸ் அச்சடித்து தாராவியில் இருந்து தேனிக்கு பயணிகளை ஏற்றிவந்த நால்வர் கைது: ஆம்னி பஸ்கள் பறிமுதல்

போலி இ.பாஸ் அச்சடித்து, மகாராஷ்ட்ரா மாநிலம் தாராவியில் இருந்து தேனிக்குப் பயணிகளை ஏற்றிவந்த இரண்டு ஆம்னி பஸ்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். நால்வர் கைது செய்யப்பட்டனர்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் சோதனைச்சாவடியில் நேற்று இரவு வாகன சோதனையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து இரண்டு ஆம்னி பஸ்கள், தேனி நோக்கி வந்துகொண்டிருந்தது.

பஸ்ஸை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மகாராஷ்ட்ரா மாநிலம், தாராவியில் இருந்து பயணிகளை ஏற்றி வருவதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசின் இ.பாஸ் வைத்துள்ளதாகவும் டிரைவர்கள் கூறியுள்ளனர்.

அதனை அடுத்து, அவர்களிடம் இருந்த இ.பாஸை போலீஸார், அதனை சோதனை செய்தனர். அப்போது அந்த பாஸ் போலியானது எனத் தெரியவந்தது. அதனையடுத்து பேருந்தை பறிமுதல் செய்து ஆண்டிபட்டி காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். தொடர்ந்து, பேருந்து உரிமையாளர், டிரைவர்கள் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறும் போது, “போலி இ.பாஸ் அச்சடித்து பயணித்துள்ளனர். இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளோம். பேருந்தில் இருந்த 30 பயணிகள், கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர், தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டனர். பேருந்தின் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன், டிரைவர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய நால்வரை கைது செய்துள்ளோம். ஏற்கனவே இதுபோன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டு மகாராஷ்ட்ராவில் இருந்து தேனி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது” என்றனர்.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் தேனியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவருகிறது. இந்நிலையில், முறைகேடாக, போலி இ.பாஸ் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை ஏற்றிவந்து தேனியில் இறக்கி விடும் கும்பல் தற்போது கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x