Published : 23 May 2020 10:56 AM
Last Updated : 23 May 2020 10:56 AM

ஆர்.எஸ்.பாரதி கைது: எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என அதிமுக அரசு மனப்பால் குடிக்கிறது; வைகோ விமர்சனம்

ஆர்.எஸ்.பாரதி கைது மூலம் எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என அதிமுக அரசு மனப்பால் குடிக்கிறது என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 23) வைகோ வெளியிட்ட அறிக்கை:

"சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.

தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கருணாநிதி செய்த பணிகளைத்தான் எடுத்துக் கூறியிருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.

கரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அதிமுக அரசு, தற்போது ஆலந்தூர் பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது.

ஆர்.எஸ்.பாரதி: கோப்புப்படம்

எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல் முகத்திரையைக் கிழிப்பதற்கும், அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், திமுகவின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, எதிர்க்கட்சியின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். மிசா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட லட்சிய வீரர்தான் ஆர்.எஸ்.பாரதி.

கரோனா தொற்று எனும் கொடும் கொள்ளை நோய் எங்கும் பரவி உயிர்களைச் சூறையாடி வரும் வேளையில், குற்றமற்ற ஆர்.எஸ்.பாரதியைச் சிறையில் அடைக்க முயல்வதன் மூலம், நடைபெறுகிற அரசு கொலைவெறி பிடித்த இதயமற்ற அரசு என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.

பாசிச வெறிகொண்ட அதிமுக அரசு, இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணராமல், காட்டுத் தர்பார் நடத்துகின்ற எடப்பாடி பழனிசாமி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x