Published : 22 May 2020 03:32 PM
Last Updated : 22 May 2020 03:32 PM

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: காலக்கெடுவை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2019, ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர் என்பவரை தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது.

தனி அதிகாரியின் நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனி அதிகாரியின் நியமனத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், ஜூன் 30-ம் தேதிக்குள் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும், ஜூலை 30-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிறப்பு அதிகாரியாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரனை நியமித்தும் உத்தரவிடடது.

இந்நிலையில், கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு அமலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி தயாரிப்பாளர் சங்கம் அவசர வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, தேர்தலை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதுகுறித்து அறிக்கையை சிறப்பு அதிகாரி அக்டோபர் 30-க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x