Published : 08 May 2014 09:12 AM
Last Updated : 08 May 2014 09:12 AM

கார் இறக்குமதி முறைகேடு வழக்கு கேரளாவின் அலெக்ஸ் ஜோசப்புக்கு ஜாமீன்: ராமச்சந்திரா பல்கலைக்கழக வேந்தர் ஜாமீன் மனு தள்ளுபடி

வெளிநாடுகளிலிருந்து ஆடம்பரக் கார்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த அலெக்ஸ் வி.ஜோசப்புக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுங்கத் துறை விதிமுறைகளுக்கு மாறாக வெளிநாடுகளிலிருந்து ஏராளமான ஆடம்பரக் கார்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்கு ரூ.48 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி சிபிஐ அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கேரளத்தைச் சேர்ந்த அலெக்ஸ் வி.ஜோசப் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் சென்னை கொண்டுவரப்பட்டு இங்குள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே இவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை சிபிஐ நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அலெக்ஸ் ஜோசப் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில், "நான் 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இந்த வழக்கின் புலன் விசாரணை முழுவதும் முடிந்து குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆகவே என்னை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால அமர்வில் நீதிபதி சி.எஸ்.கர்ணன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய நிலையில் அலெக்ஸ் ஜோசப்பை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என கூறி சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வி.ஆர்.வெங்கடாசலம் மனு தள்ளுபடி

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கர்ணன், மனுதாரர் அலெக்ஸ் வி.ஜோசப்புக்கு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் தினமும் காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் அலெக்ஸ் ஜோசப் ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை நீதிபதி விதித்துள்ளார்.

இதற்கிடையே இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சென்னை ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம், தன்னை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதேபோல், வெங்கடாசலத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x