

தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் மதுரையில் செயல்படுகிறது. இச்சங்கத் தலைவர் ஜெயம், செயலர் முருகதாஸ், பொருளாளர் எஸ்கேஎம். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை உட்பட 4 மாவட்ட கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி காமராஜிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று தடுப்புக்கான ஊரடங்கால் இசை, நாடகத் தொழில் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி உள்ளது. மதுரை மாவட்டத்தில் இத்தொழிலை மட்டும் நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தி, பல்வேறு தொழில் நடத்த அனுமதி அளித்துள்ளது. இந்நேரத்தில் இசை, நாடகம், நாட்டுப்புறக் கலைஞர்களையும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அப்போது தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதே போன்று மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி. வினயிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.