Published : 21 May 2020 09:22 PM
Last Updated : 21 May 2020 09:22 PM

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு கரோனா; சென்னையில் 567 பேர் பாதிப்பு: மொத்த பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கியது

தமிழகத்தில் இன்று 776 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 567 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 8,228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது.

776 என்கிற மொத்தத் தொற்று எண்ணிக்கையில் 71.77 சதவீதத் தொற்று சென்னையில் (567) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 13,967 -ல் சென்னையில் மட்டும் 8,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 62.96 சதவீதம் ஆகும்.

மொத்த எண்ணிக்கையில் 94 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .67% என்கிற அளவில் உள்ளது. 6282 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 44.97 சதவீதமாக உள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைவிட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 13 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்து இந்திய அளவில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.

சென்னையும் 8 ஆயிரம் என்கிற எண்ணிக்கையை கடந்து 9 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியிடங்களில் உள்ளவர்கள் தமிழகம் திரும்புவதால் அவர்கள் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்கு பெரிய சவாலாக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 94 பேரில் சென்னையில் மட்டுமே 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையின் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் நம்ம சென்னை கரோனா தடுப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 39,297 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 13,967 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 12,537 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 11,088 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 21 மாவட்டங்களில் 209 பேருக்குத் தொற்று உள்ளது. 17 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.

* தற்போது 41 அரசு ஆய்வகங்கள், 25 தனியார் ஆய்வகங்கள் என 66 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 7588 பேர்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,72,532.

* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 3,55,893.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 12,464.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 13,967.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 776.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 479 பேர். பெண்கள் 297 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 400 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6282 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 7 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 94 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 567 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 8228 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 8795 ஆக அதிகரித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை மட்டும் 9,000 என்ற தொற்று எண்ணிக்கையை நோக்கி செல்கிறது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது. இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது. மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் 62 சதவீதத்தினர் சென்னையிலும், 38 சதவீதத்தினர் பிற மாவட்டங்களிலும் உள்ளனர்.

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 655, திருவள்ளூர் 636, கடலூர் 421, அரியலூர் 355, விழுப்புரம் 322, திருநெல்வேலி 253, காஞ்சிபுரம் 236, மதுரை 191, திருவண்ணாமலை 171, கோவை 146, பெரம்பலூர் 139, திண்டுக்கல் 132, திருப்பூர் 114, கள்ளக்குறிச்சி 112 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

22 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் 87 பேருக்கும் இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 15 மாவட்டங்களில் தொற்று இல்லை. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 856 பேர். இதில் ஆண் குழந்தைகள் 463 பேர். பெண் குழந்தைகள் 393 பேர்.

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 12,026 பேர். இதில் ஆண்கள் 7837 பேர். பெண்கள் 4186 பேர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். 60 வயதுக்கு மேற்பட்டோர் 1085 பேர். இதில் ஆண்கள் 675 பேர். பெண்கள் 410 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x