Last Updated : 21 May, 2020 08:42 PM

 

Published : 21 May 2020 08:42 PM
Last Updated : 21 May 2020 08:42 PM

ஊரடங்கு நேரத்தில் சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை: சிவகங்கை அருகே இயந்திரங்களை சிறை பிடித்த கிராமமக்கள்

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமம் அருகே ஊரடங்கு நேரத்தில் சவுடுமண் பெயரில் மணல் அள்ளியதால், பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

இளையான்குடி வட்டம் சாலைக்கிராமம் அருகே முத்தூர் கண்மாய் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் 3 அடிக்கு கீழே மணல் கிடைக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் சிலர் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுள்ளனர்.

இந்த அனுமதியை பயன்படுத்தி பொக்லைன் இயந்திரம் மூலம் 3 அடிக்கு கீழே மணல் அள்ளி வந்தனர். இதையறிந்த முத்தூர் கிராமமக்கள் நேற்று மாலை மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரங்களை சிறைப்பிடித்தனர். அவர்களிடம் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிராமமக்கள் கூறுகையில், ‘ஏற்கனவே இப்பகுதியில் மண் குவாரி அமைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர், கனிமவள உதவி இயக்குநரிடம் மனு கொடுத்தோம்.

அதையும் மீறி அனுமதி கொடுத்துள்ளனர். கண்மாய் ஒட்டிய பகுதியில் மணல் அள்ளினால் தண்ணீர் வரத்து பாதிக்கப்படும். இதனால் மணல் அள்ள கூடாது,’ என்று தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மணல் அள்ளுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தநிலையில் சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஊரடங்கு சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மண் அள்ளுவதற்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x