

தினமும் குடித்துவிட்டு என்னை துன்புறுத்தி வரும் எனது மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தூத்துக்குடி ஆட்சியரிடம் தாய் கண்ணீர் மல்க மனு கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாழபுஷ்பம் (56). இவர் இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க அளித்த மனு:
வயது முதிர்வு காரணமாக எனது கணவர் முனியசாமி ஏற்கனவே இறந்து விட்டார். இந்நிலையில் எனது மகன்சின்னத்துரை (35) தினமும் மது அருந்திவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தி வருவகிறான்.
2 மாதங்களாக மதுக்கடைகள் மூடி இருந்தபோது அவன் மது அருந்தாமல் திருந்தி இருந்தான்.
இப்போது மீண்டும் மதுக்கடைகளை திறந்ததால் மீண்டும் மது அருந்திவிட்டு என்னை கொடுமைப்படுத்த தொடங்கிவிட்டான். இதனால் நான் நிம்மதி இழந்து நிற்கிறேன்.
எனது மகனின் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் சென்றுவிட்டாள். இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக முடிவுகட்ட தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும்.
மேலும் என்னை துன்புறுத்தி வரும் எனது மகனை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என, அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.