Published : 21 May 2020 07:19 PM
Last Updated : 21 May 2020 07:19 PM

பாஜக தலைவருடன் சந்திப்பு எதிரொலி; வி.பி.துரைசாமி துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்: ஸ்டாலின் உத்தரவு

பாஜக தலைவர் முருகனைச் சந்தித்ததாலும், திமுக தலைமைக்கு எதிராகப் பேட்டி அளித்ததாலும் முன்னாள் துணை சபாநாயகரும், திமுக துணை பொதுச்செயலாளருமான வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அந்தியூர் செல்வராஜ் திமுக துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுகவில் 1989-91 வரையும், 2006-11 வரையும் துணை சபாநாயகராகப் பொறுப்பு வகித்தவர் வி.பி.துரைசாமி. மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்த இவர் திமுகவின் முக்கியப் பொறுப்பான துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார்.

ராசிபுரத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி அதே ஊரைச் சேர்ந்த முருகன் பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதை வரவேற்று வாழ்த்து தெரிவிக்க தனது மகனுடன் கமலாலயம் சென்றார். அதுமுதல் பிரச்சினை அதிகரித்தது. வி.பி.துரைசாமி சமீபகாலமாக கட்சி மீதான அதிருப்தியில் மன வருத்ததில் இருந்து வந்தார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் விருப்பப்பட்ட இடத்தில் போட்டியிட சீட்டு ஒதுக்காத நிலையில், கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி.க்கான சீட்டைக் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஒதுக்காமல் அந்தியூர் செல்வராஜுக்கு அது அளிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது திமுகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

முரசொலி விவகாரத்தில் முருகனின் செயல்பாட்டால் கடும் அதிருப்தியில் இருக்கும் திமுக தலைமை, இதை ரசிக்கவில்லை. இந்நிலையில் இன்று பேட்டி அளித்த விபி.துரைசாமி கட்சித் தலைமை குறித்தும், பாஜக தலைவர் முருகனைச் சந்தித்தது குறித்தும் நியாயப்படுத்திப் பேசியிருந்தார்.

இதனால் திமுகவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வி.பி.துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x