

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து இன்று ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பஞ்சாலைகளில் வெளிமாநில த்தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அவர்கள் வேலையின்றி தவித்தனர்.
அவர்களுக்குத் தேவையான உதவிகளை ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் செய்து வந்தனர். இந்நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தேவகோட்டை அருகே ஆறாவயல் தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 60 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று அவர்களை மருத்துவ பரிசோதனை செய்து 2 பஸ்கள் மூலம் சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களுக்கு உதவி எஸ்பி கிருஷ்ணராஜா, வட்டாட்சியர் மேசியதாஸ் ஆகியோர் உணவுப் பொருட்களை வழங்கினர்.