Published : 21 May 2020 01:00 PM
Last Updated : 21 May 2020 01:00 PM

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அரசு அனுமதி

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டு முதல்வரிடமும், அமைச்சர் கடம்பூர் ராஜுவிடமும் ஃபெப்சி, தயாரிப்பாளர் சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று நிபந்தனைகளுடன் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.

தமிழக முதல்வர் சின்னத்திரை துறையினரின் கோரிக்கையைப் பரிசீலித்து கீழ்க்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்.

* சுற்றுச்சுவர் உள்ள வீடுகளுக்கு உள்ளே அல்லது அரங்கிற்குள் மட்டும் (Indoor Shooting Only) படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

* தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு (containment zone) இது பொருந்தாது.

* பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது. எனினும் ஊரகப் பகுதிகளில் (தடை செய்யப்பட்ட பகுதிகளைத் தவிர- Except-Containment Zone) பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் தடை ஏதுமில்லை.

* பார்வையாளர்களைக் கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது.

* படப்பிடிப்பு நடத்தப்படும் அரங்கம் அல்லது வீட்டை படப்பிடிப்பிற்கு முன்பும் பின்பும் கண்டிப்பாக கிருமிநாசினியால் (Disinfection) சுத்தம் செய்ய வேண்டும்.

* படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் நடிகர்கள் நடிகைகள் தவிர மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் (Mask) அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் (Social Distance) கடைப்பிடிக்க வேண்டும்.

* நடிகர், நடிகைகளும் படப்பிடிப்பு நிறைவடையும்போது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும்.

* படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளைச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* படப்பிடிப்பு நடத்தப்படும் வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் மற்றும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும்.

* அதேபோன்று படப்பிடிப்புக்கு பயன்படுத்தப்படும் கேமராக்கள் உட்பட அனைத்து சாதனங்களையும் கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.

* சளி, இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் கலைஞர்கள் அல்லது தொழில்நுட்பப் பணியாளர்கள் படப்பிடிப்பு வளாகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது.

* அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்படவேண்டும்.

* அதிகபட்சமாக நடிகர், நடிகை தொழில்நுட்பப் பணியாளர்கள் உட்பட 20 எண்ணிக்கைக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்தலாம்.

* சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

* மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

படப்பிடிப்புக்கு வருகை தரும் அனைவரும் மேற்கண்ட நிபந்தனைகளை தவறாமல் கடைப்பிடிப்பதை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உறுதி செய்துகொண்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்படுகிறது”.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x