Published : 21 May 2020 12:10 PM
Last Updated : 21 May 2020 12:10 PM

கஞ்சா போதையில் முதல்வர் பாதுகாப்பு வாகனத்தின் குறுக்கே பாய்ந்த இளைஞர்கள்: தடுக்க முயன்ற போலீஸ் மீது மோதி சிக்கினர்

கஞ்சா போதையில் கடற்கரைச் சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞர்கள் இருவர் முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை இடிப்பது போல் ஓட்டிச் சென்றுள்ளனர். இதுகுறித்துத் தகவல் கிடைத்து போலீஸார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீஸார் மீதே வாகனத்தை மோதி கீழே விழுந்து பிடிபட்டனர்.

நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் சாலை, விவகானந்தர் இல்லம் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையைக் கடந்து செல்வதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது ஐஸ் ஹவுஸ் பகுதியிலிருந்து திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் முதல்வரின் பாதுகாப்பு அணிவகுப்பில் குறுக்கே புகுந்தனர்.

முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தை இடிப்பது போல் எதிரில் சென்றனர். இதுகுறித்து உடனடியாக முதல்வரின் பாதுகாப்புக்காகச் சென்ற உதவி ஆணையர் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். வாகன எண்ணைத் தெரிவித்து இருவரையும் பிடிக்கும்படி கூறினார். உடனடியாக காமராஜர் சாலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு இத்தகவல் கிடைக்க, உழைப்பாளர் சிலை அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் அந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயன்றுள்ளார்.

அவரிடம் சிக்காமல் இருக்க தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய இளைஞர்கள் சாலையின் எதிர்ப்புறம் எம்ஜிஆர், அண்ணா சமாதி வழியாக ஓட்டித் தப்பிச் சென்றனர். அப்போது நேப்பியர் பாலத்தில் போக்குவரத்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஜெகதீசன் அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றார்.

இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த அவர்கள் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெகதீசனின் கால் மீது இடித்துத் தப்பிச் செல்ல முயன்றனர். வேகமாக எதிர்த்திசையில் செல்ல முயன்ற அவர்கள் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் மீது மோதி கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

அவர்களைப் பிடித்த போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் வாகனத்தை ஓட்டியவர் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நவீன் (19) உடன் சென்றவர் சரத்குமார் (20) எனத் தெரியவந்தது.

நவீன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையிப் டெலிபோன் ஆபரேட்டராகப் பணியாற்றுகிறார். சரத்குமார் ஈ.சி.ஆர். சாலையில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்பதும், இவர்கள் கஞ்சா போதையில் வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

நேற்று வழக்கம்போல் இருவரும் ஐஸ் ஹவுஸ் பகுதியில் கஞ்சா வாங்கி அங்கேயே சிறிது போதை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது முதல்வர் வருவதற்காக சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதை மீறி வண்ணாரப்பேட்டை நோக்கி காமராஜர் சாலையில் வேகமாகச் சென்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து வாகனம் மற்றும் கஞ்சாவைப் பறிமுதல் செய்த அண்ணா சதுக்கம் போலீஸார் 2 பேரையும் கைது செய்து பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), 269 (தொற்றுநோய் பரப்பக்கூடிய வகையில் கவனக்குறைவாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x