Published : 20 May 2020 08:39 PM
Last Updated : 20 May 2020 08:39 PM

ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வுத் தேதி; ஜூன் 5-ல் அறிவிக்கப்படும்: யூபிஎஸ்சி அறிவிப்பு

நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் தேர்வாணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் (prelims) தேர்வு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் ஜூன் 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக யூபிஎஸ்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடிமைப் பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு மே மாதம் நடக்கும். நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் எழுதும் தேர்வில் தேர்வாகும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வு (mains) எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

இதில் தேர்ச்சி அடைபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். ஆனால், கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்கவிருந்த முதல் நிலைத்தேர்வு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதன்மைத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கான நேர்முகத் தேர்வும் நடக்கவில்லை.

இந்நிலையில் கரோனோ தொற்றுப் பரவலால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆய்வு செய்ய மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தின் (யூபிஎஸ்சி) சிறப்புக் கூட்டம் ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஊரடங்கின் இரண்டாவது கட்டம் முடிவடைந்த பின்னர், இந்த ஆண்டின் மே மாதம் 3-ம் தேதிக்குப் பின்னர் முடிவெடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், பொதுப் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையிலும், கரோனா தொற்று பாதிப்பு பல மாநிலங்களில் உச்சத்தைத் தொடுவதாலும் தற்போதைய நிலையில் மீண்டும் 2019 சிவில் பணிகளுக்கான ஆளுமைத் தேர்வுகள் நேர்காணல், 2020 சிவில் சர்வீஸ் தேர்வு (முதல்கட்டம் -prelims),பொறியியல் சேவைகள் (prelims-முதன்மை), புவியியலாளர் சேவைகள் ( prelims-முதன்மை) தேர்வுகள் ஒத்திவைப்பதாக யூபிஎஸ்சி மே 3 கூட்டத்துக்குப் பின் தெரிவித்தது.

சிவில் தேர்வின் முதல்நிலைத் தேர்வு (prelims) மே 31 அன்று நடப்பதாக இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு யூபிஎஸ்சி ஆய்வு செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கான புதிய தேதியை அறிவிக்கும்.

இந்நிலையில் இன்று மத்திய குடிமைப்பணி தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அதன் இணையதளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதுகுறித்த யூபிஎஸ்சி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“தேர்வாணையம் மே 20 (இன்று) ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது. நாடு தழுவிய மூன்றாம் கட்ட ஊரடங்கிற்குப் பின்னர் நிலைமையை மதிப்பாய்வு செய்யவும் கோவிட்-19 காரணமாக கட்டுப்பாடுகள், ஊரடங்கு நீட்டிப்பைக் கவனித்து ஆராய்ந்தது. தேர்வாணையம் இனி கட்டுப்பாடுகள் இருக்காது எனத் தீர்மானித்தது. தற்போது, தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை மீண்டும் தொடங்க முடியும்.

அதன்படி புதிய தேர்வுக்கான தேதியை ஜூன் 5 அன்று தேர்வாணையம் கூடி அன்றுள்ள நிலைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் யூபிஎஸ்சி இணையதளத்தில் தேதியை அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இவ்வாறு அறிவிக்கப்படும் தேர்வுத் தேதி 30 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x