கரோனாவால் நிறுத்தப்பட்ட கீழடி, அகரம் அகழாய்வுப் பணி: 56 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்

கரோனாவால் நிறுத்தப்பட்ட கீழடி, அகரம் அகழாய்வுப் பணி: 56 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரத்தில் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணி 56 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டது. தொடர்ந்து 2 மற்றும் 3-ம் கட்ட அகழாய்வை நடத்தியது. 4, 5-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.

இந்நிலையில் பிப்.19-ம் தேதி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இங்கு அகழாய்வின்போது செங்கல் சுவர், முதுமக்கள் தாழிகள், எலும்பு கூடு போன்றவை கிடைத்தன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் 56 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது. இந்த பணியில் குறைவான ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பணிபுரிகின்றனர். அப்பகுதியில் அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் கொந்தகையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் ஓரிரு நாட்களுக்கு பிறகு அகழாய்வு பணி தொடங்கும் என தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in