Published : 20 May 2020 04:41 PM
Last Updated : 20 May 2020 04:41 PM

சாலையோரம் மீட்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு கரோனா முகாமில் வளைகாப்பு: நெகிழ வைத்த மதுரை தன்னார்வலர்கள் 

மதுரை

மதுரையில் சாலையோரம் மீட்கப்பட்டு ‘கரோனா’ பாதுகாப்பு முகாமில் சேர்க்கப்பட்ட 7 மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு, மதுரையைச் சேர்ந்த பெண் தன்னார்வலர்கள் ஒன்று கூடி வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

‘கரோனா’ ஊரடங்கில் பஸ்நிலையம், ரயில்நிலையம், சாலைகள் மற்றும் நடைபாதைகளில் வசித்த ஆதரவற்றவர்கள், மனநிலை பாதித்தவர்கள், 650 பேரை மதுரையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மீட்டு அவர்களை மாநகராட்சி மற்றும் தன்னார்வு ‘கரோனா’ பாதுகாப்பு முகாமில் தங்க வைத்து பராமரித்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உதவியுடன் தன்னார்வலர்கள், அவர்களுக்கு தினமும் சாப்பாடு வழங்கி அரவணைத்தனர். அவர்கள் உடல்நிலையை பரிசோதனை செய்து, அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கவும், மகிழ்ச்சிப்படுத்தவும் விளையாட்டுப்போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வித்தனர்.

மேலும், இவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம், மனநிலையில் இருந்தவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்தனர். பலருக்கு வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்தனர்.

இந்நிலையில் பழங்காநத்தத்தில் உள்ள ‘கரோனா’ பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த சாலையோரம் மீட்கப்பட்ட ஆதரவற்ற 7 மாதம் கர்ப்பிணி பெண்ணுக்கு, தன்னார்வலர்கள் வளைகாப்பு நடத்தி அந்த பெண்ணையும், பொதுமக்களையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.

இதுகுறித்து ‘பூம்’ ரத்ததான அமைப்பு ஒருங்கிணைப்பாளரும், தன்னார்வலருமான ஷர்மிளா கூறுகையில், ‘‘சுமார் 35 வயது இருக்கும் அந்த பெண் கோவையை சேர்ந்தவர். வீட்டை எதிர்த்து காதலித்து திருமணம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கணவர், அவரது குடும்பத்தினர் பேச்சை கேட்டு இவரை துரத்திவிட்டுள்ளார். பிறந்த வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. புகுந்த வீட்டிற்கும் திரும்பி செல்ல முடியாமல் கோவை, மதுரையில் கடந்த சில ஆண்டாக ரோட்டோரம் சுற்றித்திரிந்து நடைபாதைகளில் வசித்து வந்துள்ளார்.

அப்போது பல்வேறு நபர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த சூழலில் ‘கரோனா’ வந்ததால் அவரை தன்னார்வலர் குழுவினர் மீட்டு ‘கரோனா’ பாதுகாப்பு முகாமில் சேர்த்தனர். காதல் கணவர் கைவிட்ட விரக்தி, பாலியல் தொந்தரவு போன்ற மன அழுத்தத்தால் அந்த பெண் தற்போது சற்றே மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருப்பதால் வழக்கப்படி கர்ப்பிணி பெண்ணிற்கு நடத்தும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி அவரை மகிழ்வித்தோம், ’’ என்றார். தற்போது பிரசவ காலம் நெருங்குவதால் அந்த கர்ப்பிணி பெண் பழங்காநத்தத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x