

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பத்தினருக்கு கரோனா காலத்திலும் அரசின் நிவாரணம் சென்றடையாதது சமூக ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்கவரப்பட்டு கிராம குளக்கரையில் 13 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மிகுந்த சிரமத்திற்கு இடையே இவர்கள் 50 நாட்களை வீட்டிலேயே கடந்துள்ளனர்.
இந்த நிலையில், அரசு அறிவித்த நிர்வாரண உதவிகள் அறிந்து நியாய விலைக்கடைக்குச் சென்றபோது, அவர்களுக்கு குடும்ப அட்டை இல்லை என்ற காரணத்தைக் கூறி நிவாரண பொருட்கள் வழங்க மறுத்துள்ளனர்.
இதையறிந்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் நிர்வாகிகள், அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு, அரசின் நிவாரணப் பொருள்கள் மற்றும் நிவாரணத் தொகை கிடைக்காதது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக பண்ருட்டி வட்டாட்சியர் உதயக்குமாரிடம் கேட்டபோது, "பழங்குடியினர் ஓரிடத்தில் நிலையாக இல்லாததால், அவர்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவை வழங்க முடியாமல் போனது. தற்போது அவர்களுக்கு ஆதார் மற்றும் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசின் நிவாரணப் பொருட்கள் இன்று வழங்கப்படும். ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்க இயலாது" எனத் தெரிவித்தார்.