கரோனா களப்பணியாளர்கள் பாதுகாப்புக்கு இதுவரை ரூ.500 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கரோனா களப்பணியாளர்கள் பாதுகாப்புக்கு இதுவரை ரூ.500 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
Updated on
1 min read

கரோனா முன் களப்பணியாளர்கள் பாதுகாப்புக்கு இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தெரிவித்தது.

மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில் களத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்களுக்கு கவச உடை, முகக்கவசம், கையுறை, ரப்பர் காலனி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு வீடியோ கான்பரன்சில் விசாரித்தது.

வருவாய் நிர்வாக செயலர் தாக்கல் செய்த பதில் மனுவில், இதுவரை வருவாய், சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் கரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்புக்காக ரூ.500 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா வார்டுகளில் பணிபுரிவோரின் பாதுகாப்புக்காக 2,80,696 பிபிஎப் உடைகள் வழங்கப்பட்டுள்ளன. 2,17,240 என் 95 முக கவசங்கள், 2,80,696 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அரசு தரப்பில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் முன்களப்பணியாளர்கள் அவற்றை முறையாக பயன்படுத்துவதில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரைத்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? முகக்கவசம், கையுறைகளை முன் களப்பணியாளர்கள் முறையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய வழிமுறை உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இது தொடர்பாக தமிழக அரசு விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மே 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in