Published : 20 May 2020 09:46 AM
Last Updated : 20 May 2020 09:46 AM

நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்களும் ரூ.2,000 நிவாரண உதவித் தொகை பெறலாம்; தமிழக அரசு அறிவிப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கோப்புப்படம்

சென்னை

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்ளுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், கடந்த 24.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கின் காரணமாக பல்வேறு தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிவாரண உதவித் தொகை உட்பட பொது விநியோகத் திட்டத்தின் மூலம், அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களும், பல்வேறு தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள 1 லட்சத்து 3,343 நபர்களுக்கு இரண்டு தவணைகளாக தலா ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி நெசவாளர்கள், தங்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாமல் உள்ள நெசவாளர்களும் நெசவுப் பணியில் ஈடுபட்டு வருவதால், இவர்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெறாத கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களுக்கும் இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்றே நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெய்யும் நெசவாளர்களின் பட்டியல், விலையில்லா 200 யூனிட் மின்சாரம் பெற்று பயன்பெறும் நெசவாளர்களின் பட்டியலுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில், ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள உதவியைப் பெற்ற பட்டியலில் விடுபட்டுள்ள நெசவாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஊரடங்கு கால நிவாரணத் தொகையான ரூ.2,000 வழங்க கைத்தறித் துறை இயக்குநர் மூலமாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் வழங்குவார். அதன்படி, தகுதியான நெசவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு விண்ணப்பம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x