குற்ற வழக்கால் நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு போலீஸ் பணி: டிஜிபி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்கால் நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு போலீஸ் பணி: டிஜிபி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

குற்ற வழக்கால் நிராகரிக்கப்பட்ட இளைஞருக்கு இரண்டாம் நிலை காவலர் பணி வழங்குவது தொடர்பாக 2 வாரத்தில் பரிசீலிக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உசிலம்பட்டி மேக்கிளார்பட்டியைச் சேர்ந்த பி.எஸ்.செல்வவினோத், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2-ம் நிலை காவலர் பணிக்கு 2018-ல் நடைபெற்ற தேர்வில் வெற்றிப்பெற்றேன். ஆனால் என் மீது இரு குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி காவலர் பணிக்கு தகுதியில்லை என 14.11.2018-ல் மதுரை எஸ்பி கடிதம் அனுப்பினார்.

என் மீது குற்ற வழக்கு இருப்பது எஸ்பி கடிதம் வரும் வரை எனக்கு தெரியாது. இதனால் விண்ணப்பித்தில் குற்ற வழக்கு இருப்பதை குறிப்பிடவில்லை.

குடும்பப் பிரச்சினை தொடர்பான வழக்கில் என்னை சாட்சியளிக்க மட்டுமே அழைத்தனர். அந்த வழக்கில் நான் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதை யாரும் என்னிடம் சொல்லவில்லை. இந்நிலையில் குடும்பத்தினர் இடையே சமரசம் ஏற்பட்டதால் என் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

கரோனா பரவும் அபாயத்தால் தற்போது காவல்துறையில் 50 வயது கடந்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வதில்லை. இதனால் காவலர் பற்றாக்குறையை போக்க 2018-ல் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது என் மீது வழக்கு இல்லாததால் என்னை காவலராக நியமிக்கக்கோரி டிஜிபி, ஐஜி மற்றும் எஸ்பிக்கு 18.3.219-ல் அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. என் மனு அடிப்படையில் என்னை காவலராக நியமிக்கவும், அதுரை மதுரை மாவட்டத்தில் ஒரு காவலர் பணியிடத்தை காலியாக வைக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி நிஷாபானு வீடியோ கான்பரன்சில் விசாரித்து, மனுதாரரின் மனுவை டிஜிபி 2 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in