Last Updated : 19 May, 2020 06:32 PM

 

Published : 19 May 2020 06:32 PM
Last Updated : 19 May 2020 06:32 PM

வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கட்டுபாடின்றி சுற்றித் திரிவதால் சிவகங்கை மக்கள் அச்சம்

வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை சிவகங்கையில் தனிமைப்படுத்திய நிலையில், அவர்கள் கட்டுபாடின்றி சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்த வந்த 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றவர்களை காரைக்குடி, சிவகங்கையில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளனர். சிவகங்கை சமுதாயக் கூடம், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி, அரசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர்.

இங்கு தங்கியுள்ள பலர் கட்டுபாடின்றி கடை வீதிகளில் சுற்றித்திரிகின்றனர். இதனால் சிவகங்கை மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்டோர் தாங்கள் தங்கியுள்ள இடங்களில் போதிய வசதி இல்லாததால் வெளியில் செல்ல வேண்டியநிலை உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் போதிய வசதிகளை செய்து கொடுத்து, அவர்களை வெளியேறாமல் தடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லல் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி குணமடைந்தார். அவரை மாவட்ட ஆட்சிய ஜெ.ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல் பொன்னாடை கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x