முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்: கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய மதுரை மாநகராட்சி 

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்: கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிய மதுரை மாநகராட்சி 
Updated on
1 min read

முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கும் புதிய நடைமுறையை நேற்று முதல் மதுரை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

‘கரோனா’ பரவலை தடுக்க முககவசம் கட்டாயம் அணிய மாநில சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், மக்கள் இன்னமும் அலட்சியமாக முககவசம் அணியாமல் வெளியே வந்து செல்கின்றனர்.

சாலைகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும்போலீஸார், அவர்களை எச்சரித்து மட்டுமே அனுப்புகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் போலீஸார் முககவசம் அணியாமல் செல்பவர்களை அபராதம் விதிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ‘கரோனா’ தாக்கம் முன்போல் இல்லை. ஊரடங்கு விதிமுறைகளும் தளர்த்தப்பட்டதால் மக்கள் அதிகளவில் முககவசம் அணியாமல் வெளியே வரத்தொடங்கியுள்ளனர்.

அதனால், நேற்று முதல் முககவசம் அணியாமல் வெளியே வரும் பொதுமக்கள், கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்பவர்களுக்கு மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கத் தொடங்கியுள்ளனர். நேற்று முதல் நாளே 100 பேர் வரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘பொதுமக்களுக்கு மட்டுமில்லாது மாநகராட்சி பணியாளர்கள் முககவசம் அணியாமல் பணிக்கு வந்தால் கூட அவர்களுக்கும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும்.

‘கரோனா’வை ஒழிக்க சுய ஒழுக்கம் முக்கியம். முககவசம் தட்டுப்பாடு இல்லாமல் மெடிக்கல் ஸ்டோர்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியே வருவோர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் மீது தயவு பார்க்காமல் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளேன், ’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in