Published : 19 May 2020 03:45 PM
Last Updated : 19 May 2020 03:45 PM

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? இப்போதும் குழப்பம்தான்; ஸ்டாலின் விமர்சனம்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை அடுத்து 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. அதைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்தியன் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் செங்கோட்டையன், முதல்வர் பழனிசாமியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளிவைக்குமாறு பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைத் தள்ளி வைப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் இன்று (மே 19) அறிவித்தார்.

அதன்படி, ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "கரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15-க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான்.

அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?

மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x