Published : 19 May 2020 03:09 PM
Last Updated : 19 May 2020 03:09 PM

ஓசூரில் கரோனா தொற்றில் இருந்து மீண்ட 18 பேர் வீடு திரும்பினர்

ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த 20 பேரில் 18 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆகக் குறைந்துள்ளது.

ஓசூர் சிப்காட்- 1 தொழிற்பேட்டையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் 50 படுக்கைகள் வசதியுள்ள கரோனா தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தனி வார்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பேர் மற்றும் ஓசூர் அடுத்துள்ள சூளகிரியைச் சேர்ந்த 18 பேர் கடந்த 10 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் சூளகிரியைச் சேர்ந்த பெண்கள் - 11, சிறுமி - 1, சிறுவன் - 1, ஆண்கள் - 5 பேர் என மொத்தம் 18 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குணமடைந்த 18 பேரையும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஓசூர் வருவாய்க் கோட்டாட்சியர் குமரேசன் தலைமை தாங்கி கரோனா தொற்றிலிருந்து மீண்ட சிறுவன், சிறுமி உட்பட 18 பேருக்கும் பூங்கொத்து கொடுத்து கரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும் பொருட்களை வழங்கினார். அந்தப் பொருட்களில் வைட்டமின் மாத்திரைகள், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் உள்ளிட்டவை அடங்கிய சித்த மருந்துப் பெட்டகம், பழங்கள், காய்கறிகள், முகக்கவசம், சானிடைசர் மற்றும் கரோனா நோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட கையேடு ஆகியவை வழங்கப்பட்டன. பின்பு 18 பேரும் அவர்களுடைய இல்லங்களுக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் ஓசூர் டிஎஸ்பி சங்கு, மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கோவிந்தன், இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை மருத்துவர் கீதா, வட்டாட்சியர் வெங்கடேசன், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வன், ஓசூர் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் கூறியதாவது:

''ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை கரோனா தனி வார்டில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 20 பேரில் 18 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த 18 பேரும் அவர்களின் வீடுகளில் அடுத்த 14 நாட்களும் தனிமைப்படுத்தப்படுவர். மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் தலைமையிலான குழு மூலமாக தினமும் அவர்கள் வீடுகளில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களுக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது''.

இவ்வாறு பரமசிவம் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x