Published : 19 May 2020 02:33 PM
Last Updated : 19 May 2020 02:33 PM

சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நவீன தரவு மையம்: முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (மே 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"வேகமாக வளர்ந்துவரும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் சாதகமான புவியியல் சூழல், மனிதவளம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைந்துள்ளதால், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளங்குகிறது.

'நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' (National Payments Corporation of India) நிறுவனம், மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் சில்லறைப் பரிவர்த்தனைகள் முதல் வங்கிகளுக்கு இடையேயான பணத் தீர்வுகள் வரை அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளும்.

இந்நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் நானூறு கோடி பரிவர்த்தனைகளைக் கையாளுகிறது. இவற்றின் பொருளாதார மதிப்பு மாதத்திற்கு சுமார் பதினைந்து லட்சம் கோடி ரூபாய் ஆகும். இந்நிறுவனம், சர்வதேச அளவில் மிகப்பெரிய பரிவர்த்தனை அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

இந்நிறுவனத்தின் மூலம், சர்வதேச தரத்தில் எட்டு அடுக்கு பாதுகாப்பு உட்கட்டமைப்பு வசதிகளுடன் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்நவீன தரவு மையம் வேகமாக வளர்ந்துவரும் தகவல் தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்வதற்கு துணைபுரியும்.

சென்னை மாநகரத்தில் நான்கு அடுக்கு தரத்துடன், முதல் தரவு மையமாக இது அமைக்கப்படவுள்ளது. டிஜிட்டல் இந்தியா என்ற நோக்கத்தினைச் செயல்படுத்துகின்ற அனைத்துவிதமான டிஜிட்டல் முயற்சிகளுக்கும் இந்தத் தரவு மையம் உதவி புரியும்.

சுற்றுப்புறத் தூய்மையைப் பாதிக்காத வண்ணம் பசுமைக் கட்டிட வரைமுறைகளின்படி இம்மையம் அமைக்கப்படவுள்ளது. பொருட்களின் இணையம் எனும் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும், தங்கு தடையற்ற தொடர்ச்சியான மின்சார இணைப்பு வசதிகளைக் கொண்டதாகவும், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கும் வகையிலும் இத்தரவு மையம் அமைக்கப்படவுள்ளது".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x