Last Updated : 19 May, 2020 01:45 PM

 

Published : 19 May 2020 01:45 PM
Last Updated : 19 May 2020 01:45 PM

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தென்காசியில் ஆட்சியர் ஆலோசனை

தென்காசி 

தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள், பொதுப்பணித் துறை அலுவலர்கள், பொறியாளர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குளங்கள், கால்வாய்களை நேரில் பார்வையிட்டு, அவற்றில் ஏதேனும் விரிசல், உடைப்பு, மதகு பழுது இருப்பின் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஊற்பட்டால் உடனடியாக சரி செய்யத் தேவையான காலி சாக்கு, மணல் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வெள்ள எச்சரிக்கையின்போது ஆறு, குளங்கள், கால்வாய்களின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களைக் கண்டறிந்து, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது நிவாரண மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.

நிவாரண மையங்கள் அமைக்க ஏதுவாக உள்ள பள்ளிக் கட்டிடங்கள், சமுதாயநலக் கூடங்கள், தனியார் திருமண மண்டபங்களை முன்னதாகவே ஆய்வு செய்து, மின் வசதி, குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தீயணைப்புத் துறை வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார்நிலையில் வைத்தல், ஒவ்வொரு வாகனங்களையும் பழுது நீக்கி தேவையான பேட்டரி, ஜெனரேட்டர், கை விளக்கு ஆகியவற்றை சரி செய்து நல்ல நிலையில் இருப்பதை கண்காணிக்க வேண்டும்.

அனைத்து நீரேற்று நிலையங்களிலும், மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளிலும் குடிநீரில் போதுமான குளோரி ஏற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மழைக் காலங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள தேங்காய் சிரட்டை, பேப்பர், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

பொது விநியோகத் துறையில் எந்த நேரத்திலும் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மின் கம்பங்கள் சாய்ந்தால் விபத்து ஏற்படாதவாறு மின்சாரத்தை நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் போதிய தனிமனித இடைவெளியுடன் மக்களை தங்க வைக்க வேண்டும். சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அனைத்து வகையான உட்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், கோட்டாட்சியர்கள் பழனிக்குமார் (தென்காசி), முருகசெல்வி (சங்கரன்கோவில்) உட்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x