Last Updated : 19 May, 2020 12:35 PM

 

Published : 19 May 2020 12:35 PM
Last Updated : 19 May 2020 12:35 PM

கொடைக்கானல் வனப்பகுதி துப்பாக்கி சண்டை வழக்கு: கைதான பெண்ணின் ஜாமீன் மனு தள்ளுபடி

கொடைக்கானல் வனப்பகுதியில் போலீஸார்- மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற வழக்கில் கைதான பெண்ணின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொடைக்கானல் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் 2008-ல் வனப்பகுதியில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது போலீஸார்- மாவோயிஸ்ட் அமைப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் நவீன்பிரசாத் என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் கிருஷ்ணகிரி சிங்காரபேட்டையைச் சேர்ந்தவர் சிவசக்தி(எ) செண்பகவள்ளி(எ) கனிமொழி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். சிவசக்தி ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில் இந்த வழக்கில் கைதான சிலர் ஜாமீனில் உள்ளனர். வயதான எனது தாயை உடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் அவர் கூறியிருந்தார்.

மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வீடியோ கான்பரன்சில் விசாரித்தார். அரசு தரப்பில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை முடியவில்லை எனக் கூறப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையை 4 வாரத்தில் திண்டுக்கல் நீதிமன்றம் முடிக்க வேண்டும் என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x