Last Updated : 19 May, 2020 11:52 AM

 

Published : 19 May 2020 11:52 AM
Last Updated : 19 May 2020 11:52 AM

சம்பளமின்றி ஊரடங்கு பாதுகாப்புப் பணி செய்கிறோம்?- ஊர்க்காவல் படையினர் புகார் 

மதுரை

தமிழகத்தில் முக்கிய திருவிழாக்கள் மற்றும் அவசரக் காலங்களில் காவல்துறையினருக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர்.

இவர்கள் சேவை அடிப்படையில் பணியில் சேர்ந்தாலும், காவல்துறையினருடன் இணைந்து, அவர்களுக்கு இணையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

மாநகராட்சி பகுதிகளில் சுமார் 300 பேர் வரையிலும், மாவட்ட பகுதியில் 200 பேரும் என, தமிழகத்தில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு மாதமும் குறைந்த 10 முதல் 15 நாட்கள் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருவிழாக்களின்போது, மட்டும் 20 நாள் வரை வாய்ப்பு கிடைக்கும். பலர் சேவை நோக்கத்தில் பணிபுரிந்தாலும், சிலர் சீருடைய பணி வாய்ப்பு கிட்டாத விரக்தியில் ஊர்காவல் படையில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். ரூ.150 என்ற ஊதிய விகிதம் உச்ச நீதிமன்ற உத்தரவால் தினமும் ரூ.565 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்புக்கான பணியில் மார்ச் 24ம் தேதி முதல் ஏராளமான ஊர்காவல் படையினர் பணியாற்றுகின்றனர். காவல்துறையினரை போன்று இவர்களும் விடுமுறையின்றி பணியில் உள்ளனர். டாஸ்மாக் கடைகள் திறந்த நிலையில், ஒவ்வொரு கடையிலும் ஊர்காவல் படையைச் சேர்ந்த தலா இருவர் போலீஸாருடன் சேர்ந்து பணி செய்கின்றனர்.

இவர்களுக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. ஊரடங்கால் நிதி வரவில்லை என, காரணம் சொல்லப்படுகிறது என்றாலும், இந்த ஊதியத்தை மட்டுமே நம்பியவர்கள் உணவுக்கு சிரம்மப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

ஊர்காவல் படையினர் கூறுகையில்,‘‘ தினமும் ரூ.565 சம்பளம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இதை 4 மணி நேரம் என்ற கணக்கில் இரு நாளாக பிரித்து பணி அளிக்கின்றனர். பெரும் பாலான மாவட்டத்தில் 10 நாள் மட்டுமே வாய்ப்பு அளிக்கப் படுகிறது.

கரோனா தடுப்பு பணியில் 14 ஆயிரம் பேர் ஈடு பட்டுளோம். ஊரடங்கால் 50 நாட்களை கடந்தும் இதுவரை எங்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை.

நோய் தொற்று நேரத்தில் உயிரை பற்றி கவலையின்றி பணியாற்றும் பலர், இதை நம்பியே உள்ளோம். மற்ற மாநிலங் களில் 25 நாட்கள் வரை வாய்ப் பளித்து, ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைக்கிறது, என்றனர்.

ஏரியா கமாண்டர் ஒருவரிடம் கேட்டபோது,‘‘ பெரும்பாலான இடங்களில் உணவுப்படி ரூ.4500 வழங்கியுள்ளோம். கரோனா தடுப்புக் கால பணிக்கு முதல்கட்டமாக 15 நாளுக்கான சம்பளம் ஓரிரு நாளில் கிடைக்கும். அடுத்து 15 நாளுக்கு விரைவில் வரும்.

புறநகர் பகுதியில் 8 மணிக்கு நேரத்துக்கு ரூ.565 சம்பள மும், மாநகராட்சி போன்ற இடங்களில் 8 மணி நேரத்தை இரண்டாக பிரித்து 4 மணி நேரத்துக்கு ரூ.280 வீதமும் வழங்கப் படுகிறது. ஊர்காவல் படையினருக்கே இது தெரியும்,’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x