

சிவகங்கை மாவட்டத்தில் 8 மாதங்களாக ஓய்வூதியம் கிடைக்காமல் 5 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்காக நல வாரியங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் கட்டிட தொழிலாளர்கள், ஆட்டோ , பனைமரத் தொழிலாளர்கள், முடித்திருத்துவோர், தையல் கலைஞர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களுக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவித்தொகை, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, விபத்துக்கால நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் அமைப்பு சாரா நலவாரியங்களில் பல ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதில் 60 வயது நிரம்பிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தொழிலாளர்களுக்கு 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை.
மேலும் ஊரடங்கால் அவர்கள் உணவிற்கே சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி கூறியதாவது: நிதி ஒதுக்கீடு வரவில்லை என கூறி, அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண உதவியும் பலருக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார், என்றார்.