Published : 18 May 2020 05:20 PM
Last Updated : 18 May 2020 05:20 PM

யாசகம் பெற்ற பணத்தில் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் ‘கரோனா’ நிவாரண நிதி: மதுரையில் நெகிழ வைத்த யாசகரின் மனிதநேயம்

மதுரையில் யாசகர் ஒருவர், ‘கரோனா’ நிவாரண நிதியாக இன்று ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி, பொதுமக்களுக்கு தன்னுடைய மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளார்.

‘கரோனா’ ஊரடங்கு காலம் நமக்கு நிறைய மனிதநேயம் கொண்டவர்களை அடையாளப்படுத்தி உள்ளது. வசதியில்லாத அடித்தட்டு மக்கள் கூட தங்களிடம் இருக்கும் சொற்ப சேமிப்பை சுயநலமாக எதிர்கால தேவைக்கு சேமித்து வைக்காமல் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகரம் நீட்டி நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.

உதாரணமாக கடந்த வாரம் மதுரையில் சலூன் கடைக்காரர் ஒருவர் தன்னுடைய மகள் படிப்பிற்கு சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வறுமையில் வாடிய மக்களுக்கு அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கி எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்தார்.

இந்நிலையில் இன்று மதுரையில் மற்றொரு நெகிழ்ச்சி சம்பவமாக யாசகம் பெறுபவர் பூல்பாண்டி என்பவர் ‘கரோனா’ நிவாரண நிதியாக தன்னுடைய சேமிப்பு தொகை ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டிஜி.வினயை சந்தித்து வழங்கியுள்ளார். 65 மதிக்கத்தக்க இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர்.

40 ஆண்டுகளாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் புன்னிய ஸ்தலங்கள், சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்று யாசகம் பெற்று வருகிறார். தான் யாசமாகப் பெறும் பணத்தைதனக்காக சேமித்து வைக்காமல் அதில் பெரும் பகுதியை தான் யாசகம் பெறும்தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி மற்றும் கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளார். குடிநீர் வசதியில்லாத பள்ளிகளுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.‘கரோனா’ போன்ற இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் வசதிப்படைத்தவர்களே, உதவ மனமில்லாதநிலையில் யாசகரின் இந்த மனதநேயம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘மக்களிடம் என்னுடைய அன்றாட வாழ்வாதாரத்திற்காக யாசகம் பெறுகிகிறேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் என்னுடைய தேவைக்கு போக மீதிப்பணத்தில் ஏழைக் குழந்தைகள் கல்விக்காகவும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் உதவுகிறேன்.

‘கரோனா’ தொடங்குவதற்கு முன் மதுரை வந்தேன். கடந்த 2 மாதமாக அரசு மருத்துவமனை, ஆட்சியர் அலவலகம், காந்திமியூசியம், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மக்கள் அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளில் உள்ள நடைபாதைகளில் தங்கி யாசகம் பெற்றேன். ஒரு மாதம் முன்

என்னை தன்னார்வலர்கள் சிலர் மீட்டு மாநகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதனால், கடந்த ஒரு மாதமாக பிச்சையெடுக்க முடியவில்லை. ஆனால், நான் ஏற்கணவே வைத்திருந்த பணத்தில் என்னுடைய பங்களிப்பாக ஒரு தொகையைக் கொடுக்க முடிவெடுத்தேன். இதை நான் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு வந்த அதிகாரகளிடம் சொன்னேன். அவர்கள் பாராட்டி அதற்கான வழிமுறைகளை சொல்லினர்.

அதன்படி இன்று ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கினேன். மதுரையை போல் நான் வாழ்வதற்கு உதவிய 10 தென் மாவட்டங்களுக்கு உதவத்திட்டமிட்டுள்ளேன். நான் வழங்கும் இந்த சேமிப்பு பணம் என்னுடையவில்லை. பொதுமக்களிடம் இருந்து பெற்றேன். எனக்கு அன்றாடம் கிடைக்கும் ஆகாரம் மட்டும் போதும். அது தேவையான அளவு இலவசமாகக் கிடைக்கிறது. என்னிடம் பணம் இருந்து என்ன பயன். அதனால், பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை மீண்டும் அவர்களிடமே கொடுக்கிறேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x