Last Updated : 17 May, 2020 07:04 PM

 

Published : 17 May 2020 07:04 PM
Last Updated : 17 May 2020 07:04 PM

குமரியில் இருந்து பிஹாருக்கு 847 வடமாநிலத் தொழிலாளர்கள்  ரயிலில் புறப்பட்டனர்; மாவட்ட ஆட்சியர் வழியனுப்பி வைத்தார் 

நாகர்கோவில்

குமரியில் இருந்து 847 வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயிலில் பிஹார் புறப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

குமரி மாவட்டத்தில் இருந்து ஊரடங்கால் வடமாநிலத் தொழிலாளர்கள் 847 பேர் சிறப்பு ரயில் மூலம் பிஹார் புறப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ரயிலைக் கொடியசைத்து, தொழிலாளர்களை வழியனுப்பி வைத்தார்.

பிஹார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உட்பட வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள், வலை தொழிற்சாலை, செங்கல் சூளை, தென்னை நார் ஆலை, இருப்புப் பாதை அமைக்கும் பணி, ஓட்டல் பணி எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலர் குடும்பத்துடனும் வசித்து வருகின்றனர்.

தற்போது கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழில் இன்றி தவித்ததுடன், நோய்த் தொற்று அச்சத்தில் இருந்தனர். வாழ்வாதாரத்தை இழந்த இவர்கள் தங்களைச் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆன்லைன் மூலம் இ - பாஸ் விண்ணப்பமும் செய்திருந்தனர்.

இந்நிலையில், வடமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு ரயிலில் அனுப்பி வைக்க குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து 847 வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் பிஹார் அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து வடமாநிலத் தொழிலாளர்களை ரயிலில் அனுப்பி வைத்தார்.

முன்னதாக, கரோனா அறிகுறி உள்ளனவா என அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பேருந்து மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர் எஸ்.பி. ஸ்ரீநாத் முன்னிலையில் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.

இதனால் வடமாநிலத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதே சிறப்பு ரயில் மூலம் விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தில் இருந்தும் வடமாநிலத் தொழிலாளர்கள் செல்கின்றனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 1378 வடமாநிலத் தொழிலாளர்கள் பிஹாரின் ஹாஜிபூருக்குச் சென்றடைகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x