Published : 17 May 2020 06:46 PM
Last Updated : 17 May 2020 06:46 PM

உம்பன் புயல் வலுப்பெறுகிறது; மேற்கு, மத்திய, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

உம்பன் புயல் வலுப்பெறுவதால் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:

''நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த உம்பன் புயலானது, தெற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்குப் பகுதியில் சுமார் 660 கிலோ மீட்டர் தூரத்திலும், நாகைக்கு கிழக்கே சுமார் 650 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

இது நாளை வரை ஒடிசா கடற்கரையை நோக்கி நகர்ந்து அதி தீவிரப் புயலாக மாறக்கூடும். அதன் பின் மேற்கு வங்கக் கடற்கரையை நோக்கி நகரும். இதன் காரணமாக தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்று சுமார் 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் நாளை 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உம்பன் புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் வட்டம் பகுதியில் 3 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் இரண்டு செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்''.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x