மும்பையில் இருந்து வந்த மேலும் 4 பேருக்கு கரோனா:  சிவகங்கை மாவட்டத்தில் பாதிப்பு 26 ஆக உயர்வு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகாராஷ்டிரா, மேற்குவங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் காசநோய் மருத்துவமனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 10 பேருக்கு ஏற்கனவே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் சிங்கம்புணரி அருகே காளாப்பூரரைச் சேர்ந்த 41 வயது ஆண், 35 வயது அவரது மனைவி (35 வயது), மகன் (9 வயது) மற்றும் 43 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று உள்ளது. அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26- ஆக உயர்ந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in