Last Updated : 17 May, 2020 12:28 PM

 

Published : 17 May 2020 12:28 PM
Last Updated : 17 May 2020 12:28 PM

அமெரிக்காவில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 1000 சேவகர்களுக்கு அன்றாட உணவு: நாகைத் தமிழர் ஏற்பாடு

அமெரிக்காவில் கரோனா தடுப்புப்பணியில் களத்தில் முன்னணியில் இருக்கும் காவலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு அங்கிருக்கும் நாகப்பட்டினம் தமிழரான சபாபதி ராஜரெத்தினம் என்பவர் சக தமிழர்கள் உதவியுடன் இலவசமாக உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.

உலக நாடுகளை எல்லாம் மிரட்டி வரும் கரோனா அமெரிக்காவையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றைய கணக்குப்படி அங்கு கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உயிர் வாழவே போராட்டமாக இருக்கும் இந்த சூழ்நிலையிலும் அங்குள்ள தமிழர்கள் மனிதாபிமானத்தோடு மற்றவர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

அங்குள்ள சியாட்டில் நகரில் வசிக்கும் தமிழர்கள் கரோனா களத்தில் தங்களால் இயன்றதைச் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, கரோனா பரவல் தடுப்புப் பணியில் முன்னணியில் உள்ள காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு நாள்தோறும் தரமான உணவுகளைத் தயாரித்து இலவசமாக வழங்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதையடுத்து சியாட்டிலில் உள்ள தமிழர்கள் நடத்தும் உணவகத்தில் இதற்கான உணவைச் சமைத்து தினமும் 1000 பேருக்கு உணவை வழங்கி வருகிறார்கள். இந்தப் பணியை முன்னெடுத்தத்துடன் அனைவரையும் ஒருங்கிணைத்து முக்கியப் பங்காற்றுபவர் சபாபதி ராஜரத்தினம்.

சபாபதி, தனியார் நிறுவனம் ஒன்றில் தொலைத் தொடர்பு பொறியாளராக வேலை செய்கிறார். சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலங்களில் இவர் தமிழக மக்களுக்காக ஏராளமாக உதவியுள்ளார். இதுபோன்ற பெருந்துயரான நேரங்களில் சக மனிதர்களுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு உதவுவதுதான் மனிதப் பண்பு என்கிறார் சபாபதி. இவரது இந்தச் சேவைக்கு சியாட்டில் நகர மக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x