Last Updated : 16 May, 2020 05:35 PM

 

Published : 16 May 2020 05:35 PM
Last Updated : 16 May 2020 05:35 PM

வெளி மாநிலங்களில் தவிக்கும் பெண்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வர நடவடிக்கை; வசந்தகுமார் எம்.பி., 5 எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

ஊரடங்கால் வெளி மாநிலங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வரமுடியாமல் தவிக்கும் பெண்களை மீட்டு அழைத்து வருவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வசந்தகுமார் எம்.பி. மற்றும் 5 எம்எல்ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.

வசந்தகுமார் எம்.பி. மற்றும் 5 எம்எல்ஏக்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்தனர். இதன் பின்னர் வசந்தகுமார் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வேறு மாநிலங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் வரும்போது மாவட்ட எல்லையான, ஆரல்வாய்மொழியில் 3 கிலோ மீட்டர் நீளத்திற்கு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இவ்வாறு வருபவர்களை விடுதிகளுக்கு அழைத்துச் செல்ல 10 கார்கள் அல்லது பதினைந்து கார்கள் சேர்ந்த பிறகுதான் அனுப்புகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு சரியில்லை என்று ஏராளமான புகார்கள் எனக்கும், எம்எல்ஏக்களுக்கும் வருகின்றன.

இதேபோன்று மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் சொந்த ஊர் வர முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை உடனடியாக சொந்த ஊர்களுக்கு அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோன்று டீக்கடைகளை காலை 5 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்க உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். வெளியூர்களில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு சுத்தமான உணவு, சுகாதாரமான தங்குமிடம், தனிக் கழிப்பறைகள், கூடுதல் சுகாதார மையம் என பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளோம்''.

இவ்வாறு வசந்தகுமார் எம்.பி. கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x