Last Updated : 16 May, 2020 05:03 PM

 

Published : 16 May 2020 05:03 PM
Last Updated : 16 May 2020 05:03 PM

மும்பையில் இருந்து வந்த 9 பேருக்கு கரோனா ; சிவகங்கை மாவட்டத்தில் பாதிப்பு 22 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவியில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வந்த 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் 9 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 12 பேருக்கு ஏற்கெனவே கரோனா தொற்று இருந்தது. அவர்கள் அனைவரும் குணமடைந்ததால் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியது.


இந்நிலையில் 22 நாட்களுக்குப் பிறகு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவியில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் காரைக்குடி அமராவதிப் புதூர் காசநோய் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


சிலதினங்களுக்கு முன்பு நடந்த பரிசோதனையில் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணிற்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இதில் சிவகங்கை அருகே என்.நெடுங்குளத்தைச் சேர்ந்த 65 வயது ஆண், அம்மன்பட்டியைச் சேர்ந்த 47 வயது மற்றும் 54 வயது ஆண்கள், கல்லலைச் சேர்ந்த 13 வயது சிறுமி, வெற்றியூரைச் சேர்ந்த 57 வயது ஆண், தேவகோட்டை திருப்பாக்கோட்டையைச் சேர்ந்த 53 வயது ஆண், சருகனியைச் சேர்ந்த 58 வயது ஆண், காரைக்குடி சோமநாதபுரத்தைச் சேர்ந்த 51 வயது நபர், கத்தப்பட்டு மேலவளையம்பட்டியைச் சேர்ந்த 54 வயது ஆண் ஆகியோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.


அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை மாவட்டத்தில் 3,864 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து 22 நாட்களாக கரோனா தொற்று இல்லாதநிலையில் தற்போது வெளிமாநில நபர்களால் 10 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டடுள்ளது..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x