முதல்வர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: திமுக ஐடி விங் நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

தமிழக முதல்வர் குறித்து சமூக வலைதளங்கில் அவதூறு பரப்பிய திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் உள்ளிட்ட 5 பேரை கரூர் நகர போலீஸார் கைது செய்தனர்.

முதல்வர் பழனிசாமி மற்றும் தமிழக அரசு திட்டங்கள் குறித்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு அமைப்பாளர் ரீகன் (28), ஒன்றிய நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா (32), ரவிகுமார் (32), தீபக் (30), கவுதம் (23) ஆகியோர் நேற்றிரவு (மே 16) டான்சி பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

கரூர் எல்ஜிபி நகரை சேர்ந்தவர் தினேஷ் (28). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அதிமுக அனுதாபி. டான்சி பகுதிக்கு சென்ற தினேஷ், முதல்வரை சமூக வலைதளங்களில் தவறாக விமரிசித்தது குறித்து அவர்களிடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த அவர்கள் தினேஷை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த தினேஷ், கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து, கரூர் நகர காவல் நிலையத்தில் தினேஷ் இன்று (மே 16) அளித்த புகாரின்பேரில் போலீஸார் மேற்கண்ட 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் 5 பேரை ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்ற போலீஸார், கரூர் ஆயுதப்படை வளாகத்தில் காத்திருந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி அவர்களை சந்திக்க ஆயுதப்படை வளாகத்திற்கு சென்றபோது போலீஸார் அவரை அனுமதிக்க மறுத்து விட்டனர்.

இதனால், செந்தில்பாலாஜி அவர்களை சந்திக்காமலேயே திரும்பினார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் குளித்தலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in