

வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை தமிழகத்துக்கு விரைவில் அழைத்து வர சிறப்பு விமானச் சேவையை இயக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 16) வெளியிட்ட அறிக்கை:
"உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் உலக நாடுகள் பலவற்றில் உள்ள தமிழர்கள் நாடு திரும்ப கோரிக்கை வைத்தனர். மத்திய அரசும் வெளிநாடுகளில் இருக்கின்ற இந்தியர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர முயற்சிகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வர சிறப்பு விமானச் சேவையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது, சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களில் சிலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கரோனா அச்சத்தில் இருப்பதோடு, போதிய பொருளாதார வசதியும் இன்றி சிரமப்படுகிறார்கள். இவர்கள் தமிழகம் திரும்ப அனுமதி கேட்டிருப்பினும் இன்னும் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களின் குடும்பங்கள் வேதனையில் இருக்கின்றனர். தமிழர்களை விரைவில் அழைத்து வர கோரிக்கை வைக்கின்றனர். மத்திய அரசும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வர ஏற்கெனவே மேற்கொண்ட முயற்சியை விரைவுபடுத்தி விரைவில் தாயகம் அழைத்து வர வேண்டும்.
அதேபோல, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்திற்கு திரும்பத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அவர்களையும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் சொந்த மாநிலத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசு, வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை தமிழகத்துக்கு விரைவில் அழைத்து வர சிறப்பு விமானச் சேவையை மேற்கொள்ளவும், உள்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பவும் ஏற்கெனவே மேற்கொண்ட முயற்சியை விரைவுபடுத்தி உதவிட வேண்டும்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.