Published : 16 May 2020 07:37 AM
Last Updated : 16 May 2020 07:37 AM
ரயில்வே துறை சார்பில் இதுவரை இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்களில் 10 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆந்திரா, பிஹார், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிசோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து இதுவரையில் 800 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதுவரையில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 சிறப்பு ரயில்கள்
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரல், காட்பாடி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்காக கடந்த ஒரு வாரமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பேருந்துகள் மூலம் நேற்று காலை முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு, கரோனா சோதனைக்கு பிறகே ரயில் நிலையம் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
அதன்பிறகு, சென்னை சென்ட்ரலில் இருந்து பிஹாருக்கு மாலை 5 மணிக்கும், ஒடிசாவுக்கு மாலை 6 மணிக்கும், திரிபுராவுக்கு இரவு 10 மணிக்கும், சென்னை எழும்பூரில் இருந்து அசாமுக்கு இரவு 11 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஒவ்வொரு ரயிலிலும் தலா 1200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT