Published : 15 May 2020 06:56 PM
Last Updated : 15 May 2020 06:56 PM

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி உத்தரவு

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தடை உத்தரவை ரத்து செய்தது.

இதையடுத்து நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க ஏழு வண்ணங்களில் டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ண டோக்கனுக்கு மதுபானம் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்ற நிபந்தனைகளுக்குட்பட்டு சமூக விலகலுடன் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதை அமல்படுத்தும் விதமாக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி, மாநிலம் முழுவதும் உள்ள காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றித் தெரிவித்துள்ளார்.

கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்

* 550 பேர் மட்டுமே வரிசையில் நிற்கவேண்டும். மற்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு மறு நாளுக்கு வரவழைக்க வேண்டும்.

* உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சமுக இடைவெளியைப் பின்பற்றச் செய்வதில் எந்த சமரசமும் காட்ட வேண்டாம். அதற்கான உரிய நடவடிக்கையை சரியான முறையில் எடுக்க வேண்டும்.

* டோக்கன் விநியோக முறை குறித்து டாஸ்மாக் அதிகாரிகளுடன் அந்தந்தப் பகுதி அதிகாரிகள் பேசி நடைமுறையைச் செய்துகொள்ளவேண்டும். டோக்கன் தரும் இடம் தனியாக அமைக்க வேண்டும்.

* டோக்கன் விநியோக கவுன்ட்டர்களில் கூட்டம் அதிகமாக இருப்பதைத் தடுக்க அதிகமாக டோக்கன் விநியோக கவுன்ட்டர்கள் அதிகரிக்கச் செய்யவேண்டும். பார்க்கிங் இடம் அமைக்க வேண்டும். சமூக விலகலுடன் நிற்பதற்கு இடைவெளி விட்டு பெயிண்ட் மூலம் மார்க் செய்ய வேண்டும்.

இவ்வாறு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x