Published : 15 May 2020 05:06 PM
Last Updated : 15 May 2020 05:06 PM

கரோனா அறிகுறி தோன்றினால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்வது எப்படி?- மத்திய அரசின் வழிகாட்டுதல்

கரோனா தொற்று அறிகுறி தோன்றினால் தனிமைப்படுத்திக்கொள்வது குறித்த தகவலுடன், கூடுதலாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வருமாறு:

''கோவிட்-19 பாதிப்பு மிக லேசாக / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

நோக்கம்

கோவிட்-19 பாதிப்புக்கு ஆளானவர் என்ற சந்தேகத்துக்குரியவர் / நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களைக் கையாள்வதற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2020, ஏப்ரல் 7 ஆம் தேதியன்று வெளியிட்ட உரிய வழிகாட்டுதல்களுடன் இந்த வழிகாட்டுதல்கள் கூடுதலாக அமைந்துள்ளன.

இப்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, தனித்திருக்கும் காலத்தில் நோயாளிகள் மருத்துவ ரீதியாக மிக லேசான / லேசான, நடுத்தர அல்லது தீவிரத் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எனk குறிப்பிடப்பட்டு, அதற்கேற்ப (i) கோவிட் சிகிச்சை மையம், (ii) பிரத்யேக கோவிட் ஆரோக்கிய மையம் அல்லது (iii) பிரத்யேகமான கோவிட் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள்.

மிக லேசான / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள் 2020, ஏப்ரல் 7 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டன. இப்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள், அதற்கும் உயர்வானவையாக இருக்கும்.

வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கான வரையறை

i. சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரியால், நோயாளி மிக லேசான / அறிகுறி தென்படுவதற்கு முந்தைய நிலையில் உள்ளவர் எனக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ii. வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வசதியும், குடும்பத்தினரின் தொடர்புகளைத் தனிமையாக வைத்திருப்பதற்கான வசதியும் அவர்களுக்கு இருக்க வேண்டும்.

iii. 24 X 7 அடிப்படையில் அவரைக் கவனிக்க ஆள் வசதி இருக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தல் நிலையில் இருக்கும் காலம் முழுவதிலும், அவரை கவனித்துக் கொள்பவருக்கும், மருத்துவமனைக்கும் இடையில் தொடர்பு கொள்வதற்கான வசதி கட்டாயம் இருக்க வேண்டும்.

iv. அவரை கவனித்துக் கொள்பவரும், நோயாளிக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களும், சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரி பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் நடைமுறையின்படி ஹைட்ராக்சி குளோரோகுயின் புரோபிலாக்சிஸ் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

v. தனது செல்போனில் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். (பின்வரும் இணையத் தொடர்பு சுட்டியில் அதைப் பதிவிறக்கம் செய்யலாம் : https://www.mygov.in/aarogya-setu-app/). இந்தச் செயலி (ப்ளூடூத் மற்றும் வைஃபை மூலம்) எல்லா நேரத்திலும் ஆக்டிவாக இருக்க வேண்டும்.

vi. குறிப்பிட்ட இடைவெளிகளில் தன் ஆரோக்கியத்தைப் பரிசோதித்து, அந்தத் தகவல்களை மாவட்டக் கண்காணிப்பு அதிகாரிக்குத் தெரிவிக்க நோயாளி ஒப்புக்கொள்ள வேண்டும். கண்காணிப்புக் குழுக்கள் அடுத்தகட்ட யோசனைகளை வழங்க இது உதவியாக இருக்கும்.

vii. தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்வதற்கான படிவத்தை (இணைப்பு - I) நோயாளி பூர்த்தி செய்திட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

இவற்றைச் செய்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கான தகுதியைப் பெறுவார்கள்.
viii. https://www.mohfw.gov.in/pdf/Guidelinesforhomequarantine.pdf -இல் கூறப்பட்டுள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களுடன், இணைப்பு II-இல் கூறப்பட்டுள்ள அறிவுறுத்தல்களையும் நோயாளி மற்றும் அவரை கவனித்துக் கொள்பவர் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ உதவியை எப்போது நாட வேண்டும்?

நோயாளியும், அவரைக் கவனித்துக் கொள்பவரும், நோயாளியின் உடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தீவிர அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:

i. மூச்சுவிடுவதற்கு சிரமப்படுதல்

ii. மார்பில் தொடர்ந்து வலி / அழுத்தம் உணர்தல்

iii. மனக் குழப்பம் அல்லது எழுவதற்கு சிரமப்படுதல்

iv. உதடுகள் / முகத்தில் நீல நிறம் தோன்றுதல் மற்றும்

v. சிகிச்சை தரும் மருத்துவ அதிகாரி கூறும் விஷயங்கள்

வீட்டில் தனிமைப்படுத்தலை எப்போது முடித்துக் கொள்வது?

அறிகுறிகள் தோன்றியதில் இருந்து (அல்லது அறிகுறி தென்படுதலுக்கு முந்தைய நிலையில் மாதிரி எடுத்த தேதியில் இருந்து) 17 நாட்கள் கழித்து மற்றும் காய்ச்சல் குணமாகி 10 நாட்கள் கழித்து வீட்டில் தனிமைப்படுத்தல் நிலையை முடித்துக் கொள்ளலாம். வீட்டில் தனித்திருப்பதற்கான காலம் முடிந்த பிறகு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

____________________________________________________________________________

இணைப்பு I

தாமாக தனிமைப்படுத்திக் கொள்வதற்கான உறுதிமொழி

..................................... முகவரியில் வசிக்கும், ................................... உடைய மகன் / மனைவியாகிய ......................... என்ற எனக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது / பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப் பட்டுள்ளது. வரையறுத்து கூறப்படும் காலம் வரையில் எல்லா நேரங்களிலும் சுய தனிமைப்படுத்தலுக்கு கடுமையாக என்னை உட்படுத்திக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறேன்.

இந்தக் காலகட்டத்தில், என்னுடைய மற்றும் என்னைச் சுற்றி இருப்பவர்களின் உடல் ஆரோக்கியத்தை நான் கண்காணித்து, ஒருவேளை எனக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அல்லது என் குடும்பத்தில் நெருக்கமான தொடர்புகளுக்கு கோவிட்-19 தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், பணி ஒதுக்கம் செய்யப்பட்ட கண்காணிப்புக் குழுவுக்கு / கால் சென்டருக்கு (1075) தகவல் தெரிவிப்பேன்.

சுய தனிமைப்படுத்தல் காலத்தில் நான் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எனக்கு விரிவாக விளக்கப்பட்டுல்ளது. சுய தனிமைப்படுத்தலுக்கான நடைமுறைகள் எதையாவது கடைப்பிடிக்கத் தவறினால், உரிய சட்டத்தின்படி என் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

கையெழுத்து -------------

தேதி -------------

தொலைபேசி எண்''.

இவ்வாறு மத்திய பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x