Published : 15 May 2020 02:32 PM
Last Updated : 15 May 2020 02:32 PM

வளைகுடா நாடுகளில் உயிர் பயத்தில் தமிழர்கள்: சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்க வேண்டும்; வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

வளைகுடா நாடுகளில் உயிர் பயத்தில் தமிழர்கள் இருப்பதால், சிறப்பு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அன்புமணி ராமதாஸ் இன்று (மே 15) எழுதிய கடிதம்:

"கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளிலும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு, தாயகத்துக்கு அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத்' இயக்கத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருவதற்காக தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வளைகுடா நாடுகளில் பணியாற்றுவதற்காக சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள், இப்போது பல்வேறு காரணங்களால் அங்கு மிக மோசமான சூழலில் இருப்பது குறித்தும், அவர்களை உடனடியாக மீட்டுத் தாயகம் அழைத்து வருவதற்கான அவசரத் தேவை குறித்தும் தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

வளைகுடா நாடுகளில் மிகப்பெரியதான சவுதி அரேபியாவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர்.

அவர்கள் தவிர சிறிய அளவிலான பராமரிப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளைச் செய்வதற்காக 3 மாத வணிக விசாவில் சென்றவர்களும் அவர்களின் பணியை முடித்துவிட்டனர். ஆனால், ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதால், அவர்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. அவர்கள் அங்கு கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரும் தங்களிடமிருந்த பணத்தைச் செலவழித்து விட்டனர். அதனால் அடுத்த வேலை உணவுக்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை. மற்றொரு புறம் சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

அங்குள்ள இந்தியர்களில் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் கூட, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க சவுதி அரேபிய அரசு தயாராக இல்லை. அங்குள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நாட்டினருக்கு மட்டும்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களைத் தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. மாறாக, இந்தியர்கள் எவருக்கேனும் கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே மருந்து சாப்பிடும்படி பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் உயிரிழக்க நேரிடுமோ என இந்தியர்கள் அஞ்சுகின்றனர்.

தாயகம் திரும்புவற்காக அவர்கள் இணையதளத்தில் பதிவு செய்துள்ள போதிலும், இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்திற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்படாததால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தமிழர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்திலுள்ள அவர்கள் குடும்பத்தினரும் கவலையில் வாடுகின்றனர்.

கத்தார் நாட்டிலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளிலும் இந்தியத் தொழிலாளர்களுக்கு கரோனா உள்ளிட்ட எந்த நோய்க்கும் சிகிச்சை மறுக்கப்படுகிறது. கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் கரோனா வைரஸ் நோய்க்கு அதிகம் பாதிக்கப்படுவோர் இந்தியர்களாகவே உள்ளனர்.

அதே நேரத்தில், எந்த வளைகுடா நாட்டிலும் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லை என்பதால், அங்கு வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களுக்கு கரோனா தாக்கினால் மருத்துவம் பெறுவதற்கு வழியில்லை. அதனால், கத்தாரில் வேலையிழந்து வாடும் இந்தியர்கள், தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக விரைந்து தாயகம் திரும்ப விரும்புகின்றனர்.

'வந்தே பாரத்' இயக்கத்தின் கீழ் கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு கத்தார் நாட்டிலிருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாயகம் திரும்ப இயலாமல், தங்களைக் கரோனா தாக்குமோ என்ற அச்சத்தில் கத்தாரில் தவித்து வருகின்றனர்.

குவைத் நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் போதிய ஆவணங்கள் இன்றி பணிபுரிந்து வந்த இந்தியர்களுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் 7,340 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டு தாயகம் திரும்புவதற்கு வசதியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களை வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்திற்கு பாமக சில நாட்களுக்கு முன் கொண்டு சென்றுள்ளது.

வளைகுடா நாடுகளில் மிக மோசமான கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நாடு குவைத் ஆகும். அங்கு நேற்று வரை மொத்தம் 11 ஆயிரத்து 975 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் ஆவர்.

குவைத்திலும் இந்தியர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அதனால் கடந்த சில நாட்களில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5-க்கும் மேற்பட்டோர் கரோனாவுக்கு உயிரிழந்து விட்டனர். ஆனால், அவர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டனர் என்று கூறி அது குறித்த தகவல்களை மறைத்து விடுகிறது.

அதுமட்டுமின்றி, இந்தியா திரும்புவதற்காக குவைத்தில் வாழும் இந்தியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் முகாம்களில் காத்திருக்கும் நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல சிறப்பு விமானங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால் இந்தியர்களின் மன உளைச்சல் அதிகரித்துள்ளது.

குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மே 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மொத்தம் 3 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் இரு விமானங்கள் கேரளத்திற்கும், ஒரு விமானம் ஆந்திரத்துக்கும் இயக்கப்படுகின்றன. ஆனால், தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இயக்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சமும், கவலையும் அடைந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் கேரளத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவது தமிழர்கள்தான். அவர்களை மீட்டுத் தாயகத்திற்கு அழைத்து வர வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு.

எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழர்களை விரைந்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காகத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அன்புமணி கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x