Last Updated : 15 May, 2020 12:28 PM

 

Published : 15 May 2020 12:28 PM
Last Updated : 15 May 2020 12:28 PM

தூத்துக்குடியில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த 34 வயது இளைஞர் மூச்சுத்திணறல் உள்ளதாலும் சம்பந்தப்பட்ட நபரின் உடல் நிலை சற்று மோசமாக இருப்பதாலும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது இளைஞர் சென்னையில் உள்ள மீன் பதப்படுத்தும் லாரியில் டிரைவராக வேலை பார்த்தார். இந்நிலையில் அங்கு உடல் நலம் சரியில்லாமல் போகவே சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த மீன் பதப்படுத்தும் லாரியில் ஏறி தூத்துக்குடி அருகே உள்ள குறுக்குச்சாலை என்ற இடத்தில் இறங்கினார். அப்பொழுது நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அங்கு உள்ள அவரது நண்பரை அழைத்துக்கொண்டு தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து நோயின் தாக்கம் குறையாத காரணத்தினால் அங்கிருந்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐஎம்சியூவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதில் அவருக்குக் கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் நேற்று அவருக்கு மூச்சுத்திணறல் உள்ளதாலும் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாலும் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் கொண்டு வரப்பட்டு டிவிடி சிக்னல் அருகில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தூத்துக்குடி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையிலான போலீஸார் பணியில் ஈடுபட்டனர்.

அங்கு, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் தலைமையிலான மாநகராட்சி சுகாதாரக் குழுவினர் இளைஞரின் உடலை 15 அடி ஆழத்தில் வைத்துப் புதைத்தனர். தகனக்குழியில் ஒவ்வொரு இரண்டு அடிக்கு கிருமிநாசினி கலவை தூவப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தப் பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீஸ் உள்ளிட்டோர் முழு உடல் கவச உடையினை அணிந்து செயல்பட்டனர். கரோனா நோயால் பலியான இவருக்கு கடலாடியில் உறவினர்கள் பலர் இருந்தாலும், கரோனா பயம் காரணமாக அவரின் உடல் தகனத்தில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x