Published : 15 May 2020 10:45 AM
Last Updated : 15 May 2020 10:45 AM

ஒரே நாளில் 10 பேருக்கு கரோனா ; கோவில்பட்டியில்  அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை

வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களால் கோவில்பட்டி கோட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஏப்.14-ம் தேதிக்குப் பின்னர், 2-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்ததால், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முயற்சி மேற்கொண்டு வந்தனர். இதில், 3-ம் கட்டமாக மே 3-ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தநிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனர்.

இதற்கிடையே, கரோனா வைரஸ் தொற்றால் தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான 27 பேரில், ஒரு பெண் உயிரிழந்த நிலையில் மற்ற 26 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். மே 1-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக யாரும் சிகிச்சை பெறாத நிலையில், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி இருந்தது.

இந்நிலையில், சென்னையிலிருந்து எப்போதும் வென்றான் அருகே ஆதனூர் கிராமத்துக்கு வந்த 22 வயது இளம்பெண்ணுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 6-ம் தேதி உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகு அனுப்பி வைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, சென்னையிலிருந்து கோவில்பட்டி ராஜீவ் நகருக்கு வந்த 65 வயது முதியவருக்கும், கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச்சாவடியில், அனுமதியின்றி லாரியில் வந்த ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கும் கடந்த 9-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், செங்கல்பட்டிலிருந்து எட்டயபுரம் அருகே இளம்புவனத்துக்கு வந்த 27 வயது இளைஞருக்கு கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கோவில்பட்டிக்கு வந்து தனியார் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த 41 வயது தொழிலாளிக்கும், 24 வயது இளைஞருக்கும் கடந்த 12-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மும்பை அந்தேரி பகுதியில் இருந்து கயத்தாறு அருகே ஆத்திகுளத்துக்கு வந்த 58 வயதுடைய ஆணுக்கும், 53 வயதுடைய அவரது மனைவிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேபோல், மும்பை தாராவியில் இருந்து கயத்தாறு அருகே கே. சிவஞானபுரத்துக்கு காரில் வந்த 9 பேரில், 6 மற்றும், 15 வயதுடைய குழந்தைகள், 46 வயது பெண், 65 வயது ஆண் என 4 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்றிரவு கண்டறியப்பட்டது.

இதேபோல், கயத்தாறு அருகே ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த 63 வயது முதியவருக்கும், ஆத்திகுளத்தில் 45 வயது ஆண், அவருடைய மனைவி (39), 19 வயது மகள் 17 வயது மகன் மற்றும் 44 வயது பெண் ஆகியோருக்கும் என நேற்று 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் 6 பேரும் இன்று காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் கோவில்பட்டி பகுதியில் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் கோவில்பட்டி கோட்டத்தில் 18 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி காவல் சோதனைச் சாவடியில் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். உரிய அனுமதியின்றி வருவோரை போலீஸார் அனுமதிப்பதில்லை. அனுமதி பெற்று வருபவர்களில் கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் என்றால் உடனடியாக அவர்கள் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் வைரஸ் தொற்று உள்ளூர் பகுதியில் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x