Published : 14 May 2020 10:05 PM
Last Updated : 14 May 2020 10:05 PM

'கரோனாவுக்கு போலி மருந்து' அறிவிப்பால் கைது: திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவலைக் குறைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகத் தகவல் பரப்பிய திருத்தணிகாசலத்துக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அளித்த 6 நாள் போலீஸ் காவலை 4 நாட்களாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில், சித்த மருத்துவமனையை நடத்திவரும் திருத்தணிகாசலம் என்பவர் தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார். அது செய்தியாக வெளியானது.

இந்நிலையில் முதல்வர் அனுப்பிய நோயாளிகளில் 2 பேரைக் குணப்படுத்தியதாகவும், முதல்வர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றைக் குறித்த தவறான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் திருத்தணிகாசலத்துக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்தார்.

இந்த சூழலில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகச் செயல்பட்டு வரும் திருத்தணிகாசலம் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் திருத்தணிகாசலம் தலைமறைவானார்.

திருத்தணி அருகே கடந்த வாரம் திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது 188- (அரசு பிறப்பித்த உத்தரவை மீறிச் செயல்படுதல்), Epidemic Diseases Act Sec3- (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 505(1)(b)- (உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புதல்), 153 (A)- (பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழும் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்தனர்.

திருத்தணிகாசலத்தை எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

இந்த உத்தரவை எதிர்த்து திருத்தணிகாசலம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. திருத்தணிகாசலம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருத்தணிகாசலம் கைதால் எந்த பதற்றமான சூழலோ, சமூகத்தில் தாக்கமோ ஏற்படாதபோது அவரைக் காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமற்றது என்றும், முறையாக நோட்டீஸ் அனுப்பாமல் கைது செய்துள்ளனர் என்றும் வாதிட்டார்.

அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் அவரது போலீஸ் காவலை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, 6 நாள் போலீஸ் காவல் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை 4 நாட்களாகக் குறைத்து உத்தரவிட்டார்.

மேலும் போலீஸ் காவல் முடிந்து மே 16-ல் ஆஜர்படுத்தும்போதே, அவரது ஜாமீன் மனுவை விசாரித்து தகுதியின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x