தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்

பள்ளி மாணவர்களுக்கான நிவாரண உதவி.
பள்ளி மாணவர்களுக்கான நிவாரண உதவி.
Updated on
1 min read

விழுப்புரம் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் நிவாரண உதவிகள் அளித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கினால் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றன. இந்நிலையில், கடந்த 50 நாட்களைக் கடந்தும் ஊரடங்கு நீடித்து வரும் நிலையில், சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு வரும் பல குடும்பங்கள் உள்ளன.

அரசு வழங்கிய ரூ.1,000 நிவாரணம், அரிசி, பருப்பை வைத்து இத்தனை நாட்கள் தாக்குப் பிடித்து வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், விழுப்புரம் பாகர்ஷா வீதியில் மன்சூர்ஷா அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 180 பேர் படித்து வருகின்றனர்.

பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பக் கஷ்டத்தை உணர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து இம்மாத சம்பளப் பணத்தில் அனைத்து மாணவ, மாணவிகளின் குடும்பத்தினருக்கும் வழங்க முடிவெடுத்தனர். அதன்படி இன்று (மே 14) பள்ளி வளாகத்தில் அரிசி, மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை பள்ளித் தலைமை ஆசிரியர் உசேன், நிர்வாகி ஜியாவுதீன் அகமது, ஆசிரியர்கள் பாலமுருகன், மகேஸ்வரி, பவானி உள்ளிட்டோர் மாணவர்களுக்கு வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in