Published : 14 May 2020 03:17 PM
Last Updated : 14 May 2020 03:17 PM

கடலோர, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை வாய்ப்பு; ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடிப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சித் மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள தகவல்:

“தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது.

அது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16-ம் தேதி இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுக்கும்.

வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சித் மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்.

கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மடுக்குர் மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யில் 5 செ.மீ. மழையும், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் 3 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸும் பதிவாகும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதியில் வரும் 15-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 - 65 கிலோ மீட்டர் வேகத்திலும் 16-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 55 - 75 கிலோ மீட்டர் வேகத்திலும், 17-ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 65 - 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், இந்த மூன்று நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x